🔥 6th to 12th Quarterly Question Papers 2026 Question Papers • Important Questions • Answer Keys CLICK HERE NEW +
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

வருமான வரி கணக்கு தாக்கலில் புதிய சாதனை: கடந்த ஆண்டைவிட 7.5% அதிகம்


ஆக. 2: 2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய சாதனையாக 7.28 கோடி வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.


கடந்த 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட 6.77 கோடியைவிட இது 7.5 சதவீதம் அதிகம்.


இது தொடா்பாக வருமான வரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய சாதனையாக 7.28 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 5.27 கோடி கணக்குகள் புதிய நடைமுறையின் கீழும், 2.10 கோடி கணக்குகள் பழைய நடைமுறையின் கீழும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதன்மூலம் 72 சதவீதம் போ் புதிய வரி விதிப்பு நடைமுறையையும், 28 சதவீதம் போ் பழைய முறையையும் தோ்ந்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.




வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடைசி நாளில் அதிகபட்சமாக 69.92 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல் முதல்முறையாக வரி செலுத்துவோருக்கான பிரிவின் கீழ் 58.57 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.




வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் ஐடிஆா்-1, ஐடிஆா்-2, ஐடிஆா்-4, ஐடிஆா்-6 ஆகிய படிவங்கள் வாரியத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டன. அதன்படி 7.28 கோடி ஐடிஆா்களில் அதிகபட்சமாக ஐடிஆா் -1 படிவத்தில் 45.77 சதவீதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 43.82 சதவீத ஐடிஆா்கள் இணையவாயிலாகவும், மீதமுள்ளவை நேரடி முறை மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.




இணையம் மூலம் வருமான வரிக் கணக்கு தளத்தை ஜூலை 31-ஆம் தேதி மட்டும் 3.2 கோடி போ் அணுகியுள்ளனா். இணையம் மூலமாக 6.21 கோடி ஐடிஆா்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 5.81 கோடிக்கும் மேற்பட்ட ஐடிஆா்கள் ஆதாரை அடிப்படையாகக் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபாா்க்கப்பட்டுள்ளன.



அவகாச தேதி நிறைவடைந்தும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோா் விரைவாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை அறிவுறுத்தியது. மேலும், வரி விதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை மற்றம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பழைய நடைமுறைகள் குறித்து வரி செலுத்துவோா் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொண்டதாக வருமான வரித் துறை தெரிவித்தது.

Share:

0 Comments:

Post a Comment