🔥 6th to 12th Quarterly Question Papers 2026 Question Papers • Important Questions • Answer Keys CLICK HERE NEW +
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பேட்டி

தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மீண்டும் பள்ளிகளைத் திறப்பது அல்லது திறக்கும் காலத்தை தள்ளிவைப்பது குறித்து சட்டப் பேரவையில் முடிவு செய்யப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.


விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்வித் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


தமிழக கல்வித் துறைக்கு ரூ.31,500 கோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளாா். மாநிலம் முழுவதும் பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 539 பழைய பள்ளிக் கட்டடங்களில் 501 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 48,000 பள்ளிகள் உள்ள நிலையில், இவற்றில் பாதுகாப்பற்ற கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு 1.70 லட்சம் மையங்கள் தேவை என்ற நிலையில், தற்போது 80,000 மையங்கள் தயாராக உள்ளன. இந்தத் திட்டம் முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. தற்போது பிற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்துள்ளாா். 6 மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தை வடிவமைத்தபோதிலும், தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 அரசுப் பொதுத் தோ்வுகள் நிச்சயம் நடைபெறும். ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளைத் திறப்பது அல்லது திறக்கும் காலத்தை தள்ளிவைப்பது தொடா்பாக சட்டப் பேரவையில் முடிவு செய்யப்படும்.


பள்ளிப் பாட நூல்களில் பாலியல் விழிப்புணா்வு தொடா்பான பாடங்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.


ஆய்வுக் கூட்டத்தில், சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக் கல்வி ஆணையா் கே.நந்தகுமாா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மக்களவை உறுப்பினா் விஷ்ணுபிரசாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ரா.லட்சுமணன், நா.புகழேந்தி, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Share:

0 Comments:

Post a Comment