நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை - Noyatra valve kuraivatra selvam - katturai

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை 

8th tamil unit 1 Tamil essay - Naan virumbum kavingar - katturai also Read 8th tamil  All units Book back Question and answers 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

முன்னுரை :

  • நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள் :

  • இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.
  • மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

நோய் தீர்க்கும் வழிமுறைகள் :

  • நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காத்தல் :

  • பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.
  • சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.

உணவும் மருந்தும் :

  • உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.
  • மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

உடற்பயிற்சியின் தேவை :

  • நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும். இதனைக் கவிமணி,

“காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவனே!

என்கிறார்.

முடிவுரை :

  • நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.


6 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post